மதுரையில் பயங்கரம்: தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் ஊழியர் வெட்டிக் கொலை


மதுரை: மதுரையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் ஊழியரை வெட்டிக் கொன்று விட்டு நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இம்மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி முத்துலட்சுமி என்பவரை, நேற்று இரவு மருத்துவமனை வளாகத்தில் வெட்டி கொன்று விட்டு அவர் காதில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். மதுரையில் மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே மூதாட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து மூதாட்டிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். மதுரை திருமங்கலம், வாகைக்குளம் பகுதியில் மூதாட்டி ஒருவர் 65 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டார். இதே போல், மதுரை மேலூர் அருகே கச்சிராம்பட்டியில் பாப்பு என்ற 60 வயது மூதாட்டி கொல்லப்பட்டார்.

இதே போல் விரகனூர் பகுதியில் தோப்புக்குள் 56 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொல்லப்பட்டார். கடந்த ஒரு வாரத்தில் மதுரை பகுதியில் 3 கொலை சம்பவங்கள் நடந்த நிலையில், தற்போது மதுரையில் தனியார் மருத்துவமனைக்குள் கொலை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

x