பைக் வாங்கிக் கொடுக்காத பெற்றோர்: விரக்தியில் விபரீத முடிவு எடுத்த இளைஞர்!


பெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காத காரணத்தால் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அண்ணா நகரில் வசித்து வருபவர் பிரவீன்குமார். இவர் தனது பெற்றோரிடம் புதிய ரக பைக் ஒன்றை வாங்கித் தரும்படி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால், தங்களிடம் தற்போது பணம் இல்லை, பணம் கிடைத்ததும் வாங்கித் தருகிறேன் எனப் பெற்றோர் கூறி வந்துள்ளனர். இதனால் கடந்த சில தினங்களாகவே பிரவீன்குமார் மனமுடைந்து இருந்தார். இந்நிலையில், பைக் வாங்கிக் கொடுக்காத காரணத்தால் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிய பிரவீன்குமாரை மீட்ட உறவினர்கள், அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பிரவீன் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர் இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுக்காத காரணத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

x