எஸ்பி கார் மீது பைக் மோதி விபத்து : 2 இளைஞர்கள் உயிரிழப்பு!


கோர விபத்து : எஸ்பி கார் மீது மின்னல் வேகத்தில் பைக் மோதி 2 பேர் பலி!

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் சுந்தரவடிவேல் த.கா.ப. இவரது அரசு வாகனத்தில் அவரது மனைவி நீலகிரி மாவட்டத்தில் இருந்து கல்லார் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. காரை தமிழ்குடிமகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கல்லார் அருகே சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் கார் மீது அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஜுனைத் (18) மற்றும் அல்தாப் (21) ஆகிய இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

மோதிய வேகத்தில் இருசக்கர வாகனமும் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனைக் கண்டவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அல்தாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்று காலை ஜுனைத்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம், உருத்தெறியாமல் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாய் காட்சியளித்தது. இந்த விபத்து தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கியது அரசு வாகனம் என்பதால், முறைகேடாக பயன்படுத்தப்பட்டதா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

x