ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தென்காசி வருவாய் ஆய்வாளர் கைது


கைது செய்யப்பட்ட தென்காசி வருவாய் ஆய்வாளர் தர்மராஜ்

தென்காசி: தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (34). தனியார் வாகன ஓட்டுநரான இவர், தனது மாமனாரின் பூர்விக இடம் 3 சென்ட் நிலத்தை கிரையம் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு தனது பெயரில் பட்டா பெற்றுள்ளார்.

பின்னர் அந்த நிலத்தில் கடைகள் கட்ட தரிசு நிலச் சான்று பெறுவதற்காக தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். பின்னர் அந்த மனு குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, தென்காசி வருவாய் ஆய்வாளரை சந்திக்குமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, வருவாய் ஆய்வாளரை தர்மராஜை கதிரேசன் சந்தித்த போது அவர் நேரில் நிலத்தை பார்வையிட்டு, 2 ஆண்டுக்கு அடங்கல் இருப்பதாகவும், 3 ஆண்டுக்கு அடங்கல் வாங்கி கொடுக்கச் சொல்லிவிட்டு, மனுவை பரிந்துரை செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்

பின்னர் பேரம் பேசி ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் மனுவை பரிந்துரை செய்து, வட்டாட்சியருக்கு அனுப்ப முடியும் என்று தர்மராஜ் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிரேசன், இது குறித்து தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, இன்று ஊழல் தடுப்பு போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வருவாய் ஆய்வாளர் தர்மராஜிடம் கதிரேசன் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் போலீஸார் விரைந்து சென்று வருவாய் ஆய்வாளர் தர்மராஜை கைது செய்தனர்.