3-வது மாடியிலிருந்து இறங்கிய மாணவி: புடவை அறுந்து பறிபோன உயிர்: நண்பரை எழுப்ப சென்றபோது நடந்த விபரீதம்


அறையில் தூங்கிய ஆண் நண்பரை எழுப்புவதற்காக மாடியிலிருந்து பால்கனிக்கு இறங்கிய போது புடவை அறுந்து கீழே விழுந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் மகிழ்மதி(25) சென்னை ஜாம்பஜார் கண்ணப்பன் தெருவில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்தார். நேற்று இவரது ஆண் நண்பர் ராஜ்குமார் என்பவர் மகிழ்மதி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த மகிழ்மதி கதவை தட்டிய போது கதவு திறக்கப்படாததால் உடனே ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ராஜ்குமார் செல்போனை எடுக்காததால் பதற்றமடைந்த மகிழ்மதி பால்கனி வழியாக பின்பக்க கதவை திறந்து உள்ளே செல்ல திட்டமிட்டு 3-வது மாடியில் இருந்து புடவை மூலம் பால்கனிக்கு இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக புடவை அறுந்ததில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மகிழ்மதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்குவந்த ஜாம்பஜார் போலீஸார் மகிழ்மதியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆண் நண்பர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜ்குமார் அடையாறில் தங்கி பிரபல தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. நேற்று மகிழ்மதி ஊருக்கு செல்வதால் தன்னை அழைத்து செல்ல வேண்டும் என கேட்டதாகவும், அதற்காக மகிழ்மதி வீட்டிற்கு வந்ததாகவும், பின்னர் அசதியில் கதவை தாழ்பாள்போட்டுவிட்டு தூங்கிவிட்டதாகவும், மகிழ்மதி கதவு தட்டியது கேட்காததால் கதவை திறக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x