ஒருபக்கம் கந்துவட்டிக்காரர், மறுபக்கம் பெண் மிரட்டல்: பாஸ்ட்புட் கடைக்காரர் தற்கொலை வழக்கில் 6 பேர் சிக்கினர்


சென்னை கொளத்தூர் லட்சுமிநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சுதாகர்(44). இவர் சென்னை அண்ணாசாலையில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி(42) என்ற மனைவியும், தீபக்(22), ஜோயல்(15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சுதாகருக்கு செங்குன்றம் பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த வீட்டை விற்பனை செய்வதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த சுதாகர் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த கொளத்தூர் போலீஸார் சுதாகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவரது மனைவி மகேஸ்வரி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் சுதாகர் சிலரிடம் கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழலில் பணம் கொடுத்தவர் கந்து வட்டி கேட்டு கணவரை மிரட்டி வந்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எனது கணவர் சுதாகர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் கணவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார், கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக பெரவள்ளூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜன் (50), கொளத்தூரை சேர்ந்த மைதிலி(54), பாடியை சேர்ந்த கல்லூரி மாணவன் காமேஸ்வரன் (22), ரவி(54) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரியல் எஸ்டேட் புரோகர் ராஜன் செங்குன்றத்தில் கட்டி வரும் வீட்டை சுதாகர் 45 லட்ச ரூபாய்க்கு வாங்க ஒப்புக்கொண்டு முன்பணமாக 20 லட்சம் ரூபாய் கொடுத்து பாக்கி பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்துவதாக கூறியுள்ளார். முன்பணம் கொடுத்த பின்னர் இடத்தை தனது மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார். பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் பாக்கி தொகையை சுதாகரால் ராஜனுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால் ராஜன் அந்த இடத்தை மீண்டும் தன் பெயருக்கு மாற்றி தருமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதற்கு சுதாகர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், ரியல் எஸ்டேட் புரோகர் ராஜன், சுதாகருக்கு மனைவி பெயரில் பதிவு செய்த இடத்தை தன்னுடைய இடம் என்றும் அந்த இடத்திற்கான ஆவணங்கள் தொலைந்து போய்விட்டது என கூறி செங்குன்றம் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்து எப்ஐஆர் பெற்று பின்னர் சுதாகர் இடத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார். இதற்கிடையே சுதாகர் அந்த இடத்தை விற்று வரும் பணத்தில் ராஜனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு மீதி தொகை வாங்கி கடனை அடைத்துவிட எண்ணி பைனான்சியரை அணுகியபோது ராஜன் அந்த இடம் தனது பெயரில் இருப்பது போன்று ஆவணங்களை காண்பித்து இடத்தை வாங்க விடாமல் செய்து விடுகிறார். இதனை சமாளிக்க சுதாகர், மைதிலியிடம் 2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். பின்னர் குறிப்பிட்ட தேதியில் பணத்தை செலுத்த முடியாததால் மைதிலி, சுதாகரிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன் அவர் அளித்த வெற்று காசோலையில் 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்பது போல தயார் செய்து வங்கியில் செலுத்தியுள்ளார்.

வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்தவுடன் சுதாகருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியுள்ளார். ஒருபுறம் ராஜன் தொல்லை, மற்றொருபுறம் மைதிலி மிரட்டல், இதனால் மனமுடைந்த சுதாகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து மைதிலியை கைது செய்தனர். மேலும் நிலம் பிரச்சினை மற்றும் போலி ஆவணம் தொடர்பான விவகாரம் செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் அந்தப்பகுதி போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x