மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எனக் கூறி வழக்கு விசாரணைக்கு வந்த நபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணைக்காக புதூரைச் சேர்ந்த தம்பதியினர் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜராகினர். விசாரணையை தொடர்ந்து, தம்பதியினர் சேர்ந்து வாழ சம்மதித்துள்ளனர். அப்போது, அவர்களை சந்தித்த கன்னியம்மாள் என்ற பெண் தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, பெண்ணின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த தம்பதியினர் அருகில் இருந்த வழக்கறிஞர்களிடம் பெண்ணைப் பற்றி கூறியுள்ளனர். வழக்கறிஞர்கள் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அண்ணாநகர் காவல்துறையினர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தனர்.
பின்னர், தன்னை வழக்கறிஞர் என கூறி ஏமாற்றிய பெண்ணை அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு கைது செய்து அழைத்துசென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.