திருடிய லாக்கரை திறக்க முடியவில்லை... குப்பைத் தொட்டியில் வீசி சென்ற கொள்ளையர்கள்: மதுரையில் நடந்த ருசிகரம்


குப்பையில் வீசப்பட்ட லாக்கர்

நகை அடகுக்கடையில் கொள்ளையடித்த லாக்கரை உடைக்க முடியாததால் அருகிலிருந்த குப்பைத்தொட்டியில் நகை மற்றும் பணத்துடன் லாக்கரை வீசிச் சென்ற சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது.

மதுரை மாவட்டம், ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். ஜவஹர்புரத்தில் நகை அடகுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கடையை திறக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகை லாக்கர் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வைத்தியநாதன், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இச்சூழலில், அடகுக்கடைக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டியில் நகை லாக்கர் ஒன்று இருப்பதாக தூய்மைப் பணியாளர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, லாக்கரை மீட்ட காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கொள்ளையடித்த மர்ம நபர்களால் லாக்கரை உடைக்கமுடியாமல் போனதால் கடையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும், லாக்கரில் அரை கிலோ தங்க நகை மற்றும் 21 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது.

x