கோவை அருகே கஞ்சா சாக்லேட் விற்ற இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த இருவர், ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருமத்தம்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு பகுதியில் மறைந்திருந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்வது தெரிந்தது. விசாரணையில் பிடிபட்டவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் டோரா (30), அபிஷித் டோரா (27) ஆகியோர் எனத் தெரிந்தது.

இதையடுத்து இருவரும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு பாதகமான செயலில் ஈடுபட்ட இருவரையும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், அபிஷேக் டோரா, அபிஷித் டோரா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (ஜூலை 1) உத்தரவிட்டார். தொடர்ந்து இருவரும் குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்கப் பட்டனர்.

இது குறித்து கோவை மாவட்ட காவல்துறையினர் கூறும்போது,"சட்டம் - ஒழுங்கு, பொது அமைதிக்கு குந்தகம் விளை வித்தாலோ, பொது சுகாதார பராமரிப்புக்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

நடப்பாண்டில் ஜனவரியில் இருந்து தற்போது வரை 35 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப் பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு 94981-81212 என்ற எண்ணிலும், 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்"எனக் கூறியுள்ளனர்.