பழனி அருகே பத்து வயது சிறுவனை காட்டு யானை தாக்கியதில் ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒலியனூத்து காப்புக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பெரிய ஓடை அருகே விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயம் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி தனது 10 வயது மகனான ஹரிதர்ஷனுடன் இன்று அதிகாலை 6 மணி அளவில் விவசாய நிலத்தில் நின்றிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த காட்டு யானை ஒன்று சிறுவன் ஹரிதர்ஷனை தாக்கியது. தந்தையின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்தது. இதில் படுகாயமடைந்த ஹரிதர்ஷனை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், சிறுவனுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டான். விபத்து குறித்து தகவல் அறிந்த பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை காலம் என்பதால் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேடி காட்டு யானை விவசாய நிலங்களுக்கு வருவது என்பது வழக்கமாகிவிட்டது. இந்த சூழலில் தான் கன்னிவாடி பகுதியில் குட்டை கொம்பன் உள்ளிட்ட காட்டு யானைகளை விரட்டுவதற்காக கலீம் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு முகாமில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.