லாரி மீது வேன் மோதிய விபத்தில் கர்நாடகாவில் 15 பேர் உயிரிழப்பு


பெங்களூரு: கர்நாடகாவில் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ். இவரது மனைவி விசாலாட்சி அங்கன்வாடி ஊழியர். இருவரும் தங்கள் மகன் ஆதர்ஷுக்காக வங்கிக் கடன் பெற்று புதிய டெம்போ டிராவலர் வேன் வாங்கியிருந்தனர். இவர்கள் இந்த வேனில் தங்கள் குடும்பத்துடன் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட்டனர்.

இவர்கள் வழிபாடுகளை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலையில் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை ஆதர்ஷ் ஓட்டி வந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம், பையாதகி தாலுகா, குண்டனஹள்ளி சந்திப்பு அருகில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இவர் களின் வேன் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேன் முற்றிலும் உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.