குன்னூரில் கஞ்சா விற்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது


இமானுவேல் பெலிக்ஸ்

உதகை: ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் கஞ்சா விற்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கேரள, கர்நாடக இரு மாநிலங்களின் எல்லையிலும் ஒட்டி நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கஞ்சா விற்பனை எப்போதும் அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள இடங்கள் மற்றும் சோதனை சாவடிகள் போலீஸார் தீவிர சோதனை நடத்தி அவ்வப்போது கஞ்சா மற்றும் கடத்தி வர பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கஞ்சா செயல்களை ஒடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திலும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் குன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குன்னூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸார் குன்னூர் காட்டேரி பிரிவு பகுதியில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வெலிங்டன் பகுதியை சேர்ந்த இமானுவேல் பெலிக்ஸ், சுகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து குன்னூரில் விற்பனை செய்ததும், இமானுவேல் பெலிக்ஸ் இதற்கு முன்னர் வெலிங்டன் போலீஸ் நிலையம் முன்பே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் இமானுவேல் பெலிக்ஸ் மீது ஏற்கனவே கஞ்சா விற்றதாக 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இமானுவேல் பெலிக்சை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தர வடிவேல் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதைத்தொடர்ந்து ஆட்சியர் மு.அருணா, இமானுவேல் பெலிக்சை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள இமானுவேல் பெலிக்சிடம் வழங்கப்பட்டது.