லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு: ரூ.1.43 லட்சம் பறிமுதல்


நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனையின் போது உள்ளிருந்த ஒப்பந்ததாரர்கள்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி பிரிவு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அலுவலகத்தில் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் எலச்சிபாளையம் பள்ளிபாளையம் கபிலர்மலை ஒன்றியங்களை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்ட பணிக்கான காசோலை வழங்கப்படும். இதில் பல முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையின் போது அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், இளநிலை வரைவு அலுவலர் பசுபதி உதவியாளர் முத்துசாமி ஆகியோர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் 5 பேர் உள்ளே இருந்தனர். விசாரணைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

x