பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிவ சங்கர் பாபா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்குகளில் இரண்டு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், 2010-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு 2021-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்குகளை ரத்து வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், வழக்குப்பதிவு செய்வதில் எந்த தாமதமும் இல்லை எனவும் புகார் மட்டுமே தாமதமாக அளிக்கப்பட்டதாகவும் இதனை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றும் சிவசங்கர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் மைனர் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து சிவசங்கர் பாபா மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.