விருதுநகர்: சுவரில் துளையிட்டு கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: 67 பவுன் நகைகள் தப்பின


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே சுவரில் துளையிட்டு கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நரிக்குடி அருகே புத்தனேந்தலில் பட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் இயங்கி வருகிறது. இக்கட்டிடம் கடந்த 1977-ல் கட்டப்பட்டது. கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான நகைக்கடன் உட்பட அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

பட்டமங்கலம் கூட்டுறவு வங்கியில் வீரசோழன் அருகேயுள்ள வத்தாப்பேட்டை புதூரை சேர்ந்த முத்துப்பாண்டி (45) என்பவர் எழுத்தராகவும், கூடுதல் பொறுப்பு செயலராகவும் பணியாற்றி வருகிறார். இவர் பாப்பாங்குளம் கூட்டுறவு செயலாளர் ஓய்வுபெற்ற நிலையில் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில், முத்துப்பாண்டி வழக்கம்போல் 19-ம் தேதி காலை பட்டமங்கலம் கூட்டுறவு வங்கிக்கு பணிக்கு வந்துவிட்டு மாலை வழக்கம்போல் வங்கியைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். நேற்று, பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கிக்கு சென்று விட்டு மாலையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கிக்குச் சென்றுள்ளார் முத்துப்பாண்டி. அப்போது வங்கி கட்டிட சுவர் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

வங்கிக் கட்டிடத்தை சுற்றிவந்து பார்த்தபோது கட்டிடத்தின் பின்பக்க சுவர் கடப்பாரையால் உடைத்து துளையிடப்பட்டது தெரியவந்தது. அதோடு, வங்கியில் லாக்கர் இருந்த பகுதியின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருந்தது. வங்கிக்குள் சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த நகைகள் அனைத்தும் பத்திரமாக இருந்தன.

இந்தக் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து நரிக்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வங்கிக்குள் இயங்கி கொண்டிருக்கும் சிசிடிவி கேமேராக்களில் பதிவான காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் கூட்டுறவு வங்கிக்கு வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் இருந்த சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்து, பின்பக்க சுவரை கடப்பாரையால் இடித்து துளையிட்டு வங்கிக்குள் செல்ல முயற்சி செய்துள்ளது தெரிய வந்தது.

பின்னர் கழிவறை அருகேயுள்ள ஜன்னல் பகுதியையும் கடப்பாரையால் இடித்துவிட்டு ஜன்னல் வழியாகவும் வங்கியினுள் நுழைய முயன்றுள்ளனர். ஆனால், வங்கிக்குள் இயங்கி கொண்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்ததும் அங்கிருந்து பக்கத்து கட்டிடத்திற்கு சென்ற மர்ம நபர்கள், கட்டிடத்தின் மேல் உள்ள ஆஸ்பெட்டாஸ் கூரையை பிரித்து லாக்கர் இருக்கும் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

ஆனால், வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனால், வங்கி லாக்கரில் இருந்த ரூ.32 லட்சம் மதிப்பிலான சுமார் 67 பவுன் தங்க நகைகள் தப்பின. இக்கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து நரிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.