ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர்: களக்காட்டில் நடந்தது என்ன?


ரவுடி நீராவி முருகன்

நெல்லை மாவட்டம், களக்காடு வனப்பகுதியில் பிரபல ரவுடி நீராவி முருகன் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (45). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பவானி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீராவி முருகன் கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் நீராவி முருகன் கும்பல் நெல்லை மாவட்டம், வள்ளியூர் அக்கசாலை விநாயகர் கோயில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பவானி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பழனி எஸ்ஐ இசக்கிராஜா தலைமையில் காவல்துறையினர் அந்த கும்பல் பதுங்கி இருந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர். அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க காவல்துறையினர் முயற்சித்தனர். அப்போது நீராவிமுருகன் உள்ளிட்ட கும்பல் காரில் ஏறி தப்ப முயன்றனர்.

களக்காடு வனப்பகுதியில் என்கவுன்ட்டர்

களக்காடு வனப்பகுதிக்குள் காரை காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது, நீராவி முருகன் அரிவாளால் எஸ்ஐ இசக்கிராஜா உள்பட 3 காவலர்களை வெட்ட முயன்றார். சுதாரித்துக் கொண்ட எஸ்ஐ இசக்கிராஜா வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் ரவுடிகள் சிலர் தப்பி ஓடிவிட்டனர். நீராவிமுருகனை துப்பாக்கியால் சுட்டதில் அவர் இறந்தார். கார் டிரைவர் மரிய ரகுநாத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

என்கவுன்ட்டர் குறித்து நெல்லை எஸ்.பி சரவணன் கூறுகையில், திண்டுக்கல்லில் நடந்த கொள்ளை வழக்கில் நீராவி முருகனை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, அவர்களை நீராவி முருகன் தாக்கினார். தற்காப்புக்காக நீராவி முருகனை காவல்துறையினர் ஒருமுறை சுட்டனர். நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் 4 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

x