ரூ.45 கோடி மோசடி: இந்தியன் வங்கிக் கிளை மேலாளர் உட்பட 11 பேர் கைது!


சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு நிரந்தர வைப்பு நிதியாக 100 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் துணை இயக்குநர் எனக்கூறி கணேஷ் நடராஜன் என்பவர் பல்வேறு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, நிரந்தர வைப்பு நிதி 100 கோடி ரூபாயை இரு வேறு நடப்பு வங்கிக் கணக்குகளில் மாற்றம் செய்துள்ளார். பணம் மாற்றப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில் இருந்து 45 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், துறைமுகப் பொறுப்புக் கழகம் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, பின்னர் இவ்விவகாரம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி மோசடியில் தொடர்புடைய முன்னாள் இந்தியன் வங்கிக் கிளை மேலாளர் சேர்மதி ராஜா, கணேஷ் நடராஜன், தரகர் மணிமொழி உள்ளிட்ட 11 பேரைக் கைதுசெய்தனர். அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத் துறை இவ்விவகாரம் தொடர்பாகப் பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. மேலும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்புடைய தமிழகம் முழுவதும் உள்ள 15 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், இவ்வழக்கில் மோசடி நபர்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிய 45 கோடி ரூபாயை சுமார் 230 ஏக்கர் நிலங்கள், வாகனங்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்ததையும் அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும், மோசடி செய்யப்பட்ட 45 கோடி ரூபாயில் 15.25 கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்ட போலி நடப்பு வங்கிக் கணக்கில் இருந்து துணை இயக்குநர் என நாடகமாடிய கணேஷ் நடராஜன் என்பவரால் எடுக்கப்பட்டதும், மீதமுள்ள 31.65 கோடி ரூபாய் பணம் 49 பணப்பரிமாற்றங்கள் மூலம் பல்வேறு வங்கிக்கணக்குகளில் மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட கணேஷ் நடராஜன், சேர்மதி ராஜா, சுடலை முத்து, விஜய் ஹெரால்டு, ராஜேஷ் சிங், சியாத், சாகீர் ஹுசைன், சுரேஷ் குமார், மணிமொழி, செல்வகுமார், அருண் அன்பு ஆகிய 11 பேரை அமலாக்கத் துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x