எனது வீட்டை பராமரிக்கவிடவில்லை: வாடகைதாரர்கள் மீது நடிகர் செந்தில் புகார்


தனக்கு சொந்தமான வீட்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்து வாடகைதாரர்கள் பிரச்சினையில் ஈடுபடுவதாக நடிகர் செந்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

பிரபல திரைப்பட காமெடி நடிகர் செந்தில் விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் நடிகர் செந்திலுக்கு சாலிகிராமம், பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி வீடு உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு செந்தில் தனது வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த சினிமாவில் புரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றி வந்த சகாயராஜ் என்பவருக்கு 2.5 லட்சம் ரூபாய் வீதம் மாத வாடகைக்கு கொடுத்ததாகவும், அதை சகாயராஜ் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ஆக மாற்றி நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சகாயராஜ், நடிகர் செந்திலுக்கு முறையாக வாடகை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகம் அடைந்த செந்தில், தனது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அவரது வீட்டை சகாயராஜ் தனக்கு சொந்தமான வீடு எனக்கூறி 7 குடும்பத்தினரிடம் குத்தகைக்கும், வாடகைக்கும் விட்டு பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

பின்னர் இது தொடர்பாக நடிகர் செந்தில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சகாயராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் செந்தில் தனது வீட்டின் ஒரு பகுதியை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக அங்கு சென்றபோது வாடகைதாரர்கள் செந்திலை தடுத்து தாங்கள் அளித்த குத்தகை மற்றும் வாடகை பணத்தைக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனைதொடர்ந்து நடிகர் செந்தில் தனது வீட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள விடாமல் தடுக்கும் வாடகைதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது வீட்டை மீட்டுத் தருமாறு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

x