இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம் கைது


பூணூல் அறுப்புப் போராட்டத்தை நடத்துவோம் என கூறிய இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீமை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் மேகநாதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் தனது முகநூல் பக்கத்தில் வந்த கட்டுரைப் பதிவு ஒன்றில் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு பரவியுள்ள ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தை தடுக்கும் வகையில், காஞ்சி சங்கர மடத்தில் இருந்து கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூலை அறுக்கும் போராட்டத்தை தொடங்குவோம் என பேசியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த பதிவு இஸ்லாமிய சமூக மக்களின் மனதில் வன்மத்தை விதைத்து மத ரீதியிலான கலவரத்தை உருவாக்கும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு தீங்கிழைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தடா ரஹீம் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிருந்தார். எனவே அவரது செயல்பாடுகளை கருத்தில் கொண்டு தடா ரஹீம் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து, அவரது இந்திய தேசிய லீக் கட்சியை தடை செய்ய வேண்டும் என தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம் மீது கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், இரு பிரிவினரிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

x