நிச்சயத்தின் போது நண்பர்களுடன் சென்று மணப்பெண்ணை கடத்திச் சென்ற காதலன் @ சென்னை


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: கே.கே.நகரில் காதலியின் நிச்சயதார்த்தத்தின்போது நண்பர்களுடன் சென்று உறவினர்களை தாக்கி மணப்பெண்ணைக் கடத்திச் சென்ற காதலனால் பரபப்பு ஏற்பட்டது.

சென்னை, கே.கே. நகரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, அப்பெண்ணுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதற்காக முக்கிய உறவினர்கள் முன்னிலையில் பிறர் அறியாத வண்ணம் நேற்று மாலை பெண்ணின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தம் குறித்து அறிந்த அப்பெண்ணின் காதலன் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கையில் ஆயுதங்களுடன் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்று அங்கிருந்தவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி தனது காதலியை அழைத்துள்ளார். காதலியும் காதலனுடன் செல்ல முற்பட்டபோது, பெண்ணின் உறவினர்கள் அவரைத் தடுத்துள்ளனர். உடனே, காதலனும் அவரது நண்பர்களும் பெண்ணின் உறவினர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து காதலன் தனது காதலியை அழைத்துக் கொண்டு நண்பர்களுடன் அங்கிருந்த வெளியேறி தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெண்ணின் பெற்றோர் சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். கே.கே.நகர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து, தலைமறைவான காதலன், காதலியையும், உறவினர்கள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.