வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை முயற்சி: நடிகை புகார்


வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக, நடிகை கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தி நடிகையும் மாடலுமான இஷிதா போரா, மும்பை ஓஷிவாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டுக்கு மேலே, மனிஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டில் தண்ணீர் குழாயை திறந்து வைத்ததால், இஷிதாவின் வீட்டுக்குள் தண்ணீர் வடிந்து நிரம்பியது. இதில் இஷிதா வைத்திருந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன. இதுபற்றி சொசைட்டி நிர்வாகத்தினரிடம் புகார் கூறினார் இஷிதா.

இதுகுறித்து பேசிய அவர்கள், பொருட்களின் சேதத்துக்கான இழப்பீட்டை குப்தா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், சொன்னபடி அந்த இழப்பீட்டை அவர் கொடுக்கவில்லை. அதைக் கேட்டபோது நடிகையை அவதூறாக பேசி, மிரட்டினாராம்.

இந்நிலையில், தண்ணீர் லீக் ஆகிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்று கூறி இஷிகாவின் வீட்டுக்கு நுழைந்த மனிஷ் குப்தா, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாராம். இதுபற்றி நடிகை இஷிகா, ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஒருவர் கொடுத்துள்ள பாலியல் புகார் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

x