எஸ்எஸ்ஆர் மகள், மருமகள் இடையே மோதல்; ஒருவர் காயம்: போலீஸில் புகார்


எஸ்எஸ்ஆர்

மறைந்த பிரபல நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பூம்புகார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். இவரது மகள் லட்சுமி, மகன் மருதுபாண்டி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மருதுபாண்டியின் மனைவியும், எஸ்.எஸ்.ஆரின் மருமகளுமான சுஜைனி(40), தங்களது வீட்டு வாசலில் இளநீர் விற்கும் ஒருவரை, இரவுநேரக் காவலாளியாக பணி அமர்த்தியதுடன் இரவு வீட்டில் தங்கிக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். காவலாளி பணிக்குண்டான சம்பளத்தை தருவதாகவும் ஒப்புக்கொண்டார்.

எஸ்எஸ்ஆரின் மகள் லட்சுமிக்கு இது பிடிக்கவில்லை. இளநீர் விற்பவரை காவலாளியாக நியமிப்பதற்கு பதிலாக, வேறொருவரை காவலாளியாக நியமிக்கவேண்டும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் எஸ்எஸ்ஆரின் மகள், மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்து வந்ததுள்ளது.

நேற்று இரவு இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த லட்சுமி, அண்ணி சுஜைனியை சரமாரியாகத் தாக்கியுள்ளர். இதில் காயமடைந்த சுஜைனி ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின்னர் இதுகுறித்து சுஜைனி, தேனாம்பேட்டை காவல் நி்லையத்தில் லட்சுமி மீது புகார் அளித்ததன் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அண்ணி சுஜைனி தன்னைத் தாக்கியதாக லட்சுமியும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்எஸ்ஆரின் மகன் மருதுபாண்டி மீது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

x