பரோலில் வந்து சொத்துகளை விற்று குடும்பத்துடன் ரவுடி மாயம்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு


புதுச்சேரி: சிறையில் இருந்து பரோலில் வந்து சொத்துகளை விற்று குடும்பத்துடன் மாயமான ரவுடி கர்ணாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். இந்தநிலையில் அவர் தற்போது இந்தியாவில்தான் உள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் ரவுடி கர்ணா (எ) மனோகரன். உருளையன்பேட்டையில் நடந்த கொலை வழக்கில், கடந்த 1998-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தே பல சம்பவங்களில் அவருக்கு தொடர்பில் இருந்ததால் அவர் மீது பல வழக்குகள் பதிவானது. 14 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள தன்னை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கர்ணா முறையிட்டார். இதனை உள்துறை நிராகரித்தது. உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி ப ரோலில் வந்த கர்ணா, 13-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பவில்லை. அவரது வீடும் பூட்டப்பட்டு, குடும்பத்தினரும் மாயமாகி இருந்தனர். இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், முதலியார்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியபோது, கர்ணா மற்றும் அவரது குடும்பத்தினரின் மொபைல் போன் டவர் சிக்னல் திருப்பதி வரை சென்று கட் ஆகி இருப்பது தெரியவந்தது. போலீஸார் திருப்பதி சென்று விசாரித்தபோது, கர்ணா குடும்பத்தினர் திருப்பதிக்கு செல்லவில்லை என தெரியவந்தது.

தீவிர விசாரணையில், கடந்த பல மாதத்துக்கு முன்பே தனது சொத்துக்கள் பலவற்றை கர்ணா விற்பனை செய்துள்ளார். பரோலில் வெளியே வந்த பின்பு சில பிரமுகர்களை சந்தித்த கருணா, அதன்பின்பு குடும்பத்துடன் எஸ்கேப் ஆகியது தெரியவந்தது.

இந்த நிலையில், மாயமாகி 3 நாட்களுக்கு பிறகு ரவுடி கர்ணா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த முதலியார்பேட்டை போலீஸார், கருணாவின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் புதுச்சேரி மற்றும் தமிழக போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி உள்ளனர். மாயமாகி 3 நாட்களான நிலையில் கர்ணா அவரது குடும்பத்தினர் இந்தியாவில் தான் இருக்கிறார்களா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

x