திமுக வட்டச் செயலாளர் கொலை: திருச்சியில் சிக்கிய அதிமுக நிர்வாகி


திமுக வட்டச் செயலாளர் செல்வம்

சென்னையில், திமுக வட்டச் செயலாளர் செல்வம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை திருச்சியில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் அதிமுக நிர்வாகி என தெரியவந்துள்ளது. அவர்களை சென்னைக்கு கொண்டுவந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது வட்ட திமுக செயலாளர் செல்வத்தின் மனைவி, அதேவார்டில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த செல்வம், நேற்று முன்தினம் இரவு மடிப்பாக்கத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

தேர்தல் மோதல் காரணமாகவா அல்லது ரியல் எஸ்டேட் தொழில் முன்விரோதம் காரணமாக செல்வம் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில், காவல் துறை 5 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கொலைக்கு காரணமாக இருந்த ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகியோர் சென்னையிலிருந்து தப்பிச்சென்றபோது சமயபுரம் சுங்கச்சாவடியில் இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் செல்வம் கொலை வழக்கில் தொடர்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் அதிமுக நிர்வாகி என தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இருவரையும் விசாரணைக்கு சென்னைக்கு அழைத்துவர முடிவு செய்துள்ள காவல் துறையினர், செல்வம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

x