திமுக வட்டச் செயலாளர் வெட்டிக்கொலை; சென்னையில் பயங்கரம்


திமுக வட்டச் செயலாளர் செல்வம்

சென்னையில் திமுக வட்டச் செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது மனைவியை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சி செய்துவந்த நிலையில் இந்த படுகொலை நடந்துள்ளது.

சென்னையை அடுத்த மடிப்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த செல்வம் 188-வது திமுக வட்ட செயலாளர். இவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகம் அருகே நிர்வாகிகளுடன் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. படுகாயமடைந்த செல்வத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மடிப்பாக்கம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் கொல்லப்பட்டதால், ஏற்பட்ட பதற்றம் காரணமாக மடிப்பாக்கம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

x