சிறுவன் அடித்துக்கொலையா? பண்ருட்டி பதற்றம்


முந்திரித் தோப்பில் சடலமாக சிறுவன்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் முந்திரி தோப்பில் மர்மமாக இறந்து கிடந்தான். அவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான் என்று சொல்லப்படுவதால், அதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள மருங்கூர் கீழக்கொல்லையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் செந்தில்நாதன் என்பவரின் 4 வயது மகன் அஸ்வின். நேற்று மதியம் 3 மணி அளவுக்கு வெளியே விளையாடச் சென்ற சிறுவன், இரவுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்காததால், காடாம்புலியூர் போலீஸில் இதுகுறித்து புகார் செய்தனர். போலீஸாரின் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சிறுவனை அழைத்துச் சென்றதாக தெரியவந்தது.

முந்திரி தோப்பில் கிடைக்கும் சிறுவன் உடல்

போலீஸாரும் பல இடங்களில் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே அவ்வூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.

இந்நிலையில், இன்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் பலத்த காயத்துடன் சிறுவன் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவனது உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை அழைத்துச் சென்ற இளம்பெண்ணிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

x