திருட்டு வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி போலீஸ் தாக்கியதால் உயிரிழப்பு?


காவல் துறையினர் தாக்கியதால் மாற்றுத்திறனாளி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் எழுப்பியதையடுத்து சேந்தமங்கலத்தைச் சேர்ந்த இரு உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட மூவரை சேலம் சரக டிஐஜி நஜ்மல் ஹோடா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (53). சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் உத்தரவின்படி சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்கா கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் (35) என்பவர் நகைத் திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து ஜனவரி 11-ம் தேதி குமாரைக் கைது செய்த காவல் துறையினர் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அரூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மதிவாணன் (56), சேலம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (45), அவரது மனைவி கம்சலா (45) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த திருட்டில் மூளையாகச் செயல்பட்ட நடராஜன், அவரது மனைவி லலிதா ஆகியோரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே திருட்டு வழக்கில் கைதான பிரபாகரன் நாமக்கல் கிளைச் சிறையிலும், அவரது மனைவி கம்சலா சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதில், பிரபாகரன் உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

இச்சூழலில், ‘சேந்தமங்கலம் காவல் துறையினர் தாக்கியதால்தான் பிரபாகரன் உயிரிழந்தார். அவர் கை, கால் செயல்படாத மாற்றுத்திறனாளி. மனிதாபிமானமின்றி அவரை காவல் துறையினர் தாக்கியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பிரபாகரன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் சேலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கலைவாணி ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில் நேற்று சேலம் சரக டிஐஜி (பொறுப்பு) நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் தனிப்படையைச் சேர்ந்த சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன், புதுச்சத்திரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பூங்கொடி, நல்லிபாளையம் காவல் நிலைய ஏட்டு குழந்தைவேல் ஆகிய மூவரும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றார்.

x