300 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தல் காரை விரட்டிச் சென்று பிடித்த போலீஸ்


பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை ஆய்வு செய்யும் எஸ்பி மற்றும் காவல் துறை அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டத்தில் கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் அருகே சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலை முதலைப்பட்டி அருகில், நேற்று அதிகாலை நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற காரை காவல் துறையினர் தடுத்துநிறுத்த முயன்றனர். அந்தக்கார் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த காவல் துறையினர், காரை சிறிது தூரம் விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

காரில் இருந்த மூவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனை செய்ததில், கஞ்சா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலா ஒரு கிலோ எடை கொண்ட 200 பாக்கெட்டுகள் காரில் இருந்தன.

காவல் துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்து விசாரித்ததில் காரில் இருந்த தேனி மாவட்டம் தேவராத்தைச் சேர்ந்த என்.முருகன்(49), ஜெயசந்திரன்(67), முகேஷ்(29) மூவரும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கிய கஞ்சாவை தேனி மாவட்டத்துக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுபோல் குமாரபாளைத்தில் நேற்று அதிகாலை சேலம் - கோவை நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையின்போது, ஆந்திராவில் இருந்து கோவைக்கு 2 கார்களில் 100 கிலோ கஞ்சா கடத்திய கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த முருகன்(49), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த அப்துல் ஜலீல்(69), முஜிதீப் ரகுமான்(29), சுல்தான்(29) ஆகிய நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் கூறும்போது, “கடந்த ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்படி தற்போது இக்கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் அவர்கள் தப்பிக்க முயற்சித்தபோது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர் அவர்கள் சென்ற காரை சேஸ் செய்து பிடித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ரூ.1 கோடி மதிப்புடையதாகும். ஹெராயின் போன்ற வேறு போதை வஸ்துகள் கடத்தல் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

x