அரசு வழக்கறிஞருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி; லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவு


உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில், ஊராட்சி ஒன்றிய உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி விசாரணை நடத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளராக பணிபுரிபவர் எஸ்.குமாரவேல். இவர் மீது பணி நேரத்தில் சக ஊழியர் ஒருவருடன் தகராறு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இவருக்கு 3 ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து 2013-ல் உத்தரவிடப்பட்டது. ஊதிய உயர்வு நிறுத்தத்தை 3 மாதமாக குறைக்கக்கோரி குமாரவேல், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று (ஜன.8) விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.கண்ணன் ஆஜராகி, “இந்த வழக்கின் மனுதாரர் எனது உதவியாளர்களிடம் நேரிலும், போனிலும், இந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொண்டால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகக் கூறியுள்ளார்” என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது துரதிஷ்டவசமானது. மனுதாரர் ஏற்கெனவே தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்குள் நுழைந்து, தனது வழக்கு எந்த அரசு வழக்கறிஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தைத் தெரிந்துகொண்டு, அந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக தைரியமாகக் கூறியுள்ளார்.

மனுதாரரின் இந்தச் செயலைக் கடுமையாக அணுக வேண்டும். கூடுதல் அரசு வழக்கறிஞரின் குற்றச்சாட்டு குறித்து, மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விசாரணை நடத்தி 19.1.2021-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்த தகவலை நீதிமன்றத்துக்கு கொண்டு வந்ததுடன், அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணனை நீதிமன்றம் பாராட்டுகிறது. ஒவ்வொரு அரசு ஊழியர்களும் தங்களுக்கு லஞ்சம் கொடுக்க அணுகும்போது இவ்வாறு செயல்பட வேண்டும்" என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

x