கானா பாடகி இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது மோசடி புகார்


இசைவாணி

தனது முன்னாள் கணவர் சதீஷ், தன் புகைப்படத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய சமூக வலைதள கணக்குகளை நீக்க வேண்டுமெனவும், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரபல கானா பாடகி இசைவாணி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவன தயாரிப்பில், கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கானா பாடகி இசைவாணி. பிபிசி தேர்ந்தெடுத்த 100 சாதனைப் பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற இசைவாணி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர், தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இசைவாணி, இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பபுலு மீது, புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சதீஷ், இசைவாணி

அதில், ‘கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு சதீஷ் என்பவரோடு எனக்குத் திருமணம் நடந்தது. அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்துவிட்டோம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவாகரத்து பெற்றுவிட்டடேன். விவாகரத்தான பிறகும் சதீஷ், என்னை மனைவி என கூறிக்கொண்டு எனது புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் போலியான பக்கங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபடுகிறார். சதீஷ் எனது பெயரைப் பயன்படுத்தி ஆர்கெஸ்ட்ரா மூலம் பணம் சம்பாதிக்கிறார்.

விவாகரத்துக்குப் பிறகு, சதீஷ் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். முன்னாள் கணவர் சதீஷ் பலரிடம் என்னை இசை நிகழ்ச்சியில் பாடவைப்பதாகக் கூறி முன்தொகை வாங்கி மோசடி செய்து வருகிறார். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் இசை நிகழ்ச்சிக்கு ஏன் வரவில்லை என என்னிடம் கேட்பகிறார்கள். எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் சதீஷிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘இதைத் தொடர்ந்து செய்வேன். முகத்தில் ஆசிட் வீசுவேன்’ என கொலை மிரட்டல் விடுக்கிறார்’ என்று புகாரில் கூறியுள்ளார்.

x