திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையக் கொள்ளையில் திருப்பம்


கைது செய்யப்பட்டுள்ள டீகாராம், அவரது மனைவி சரஸ்வதி

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்ட்டர் கொள்ளை நிகழ்வில் திருப்பமாக, ரயில்வே கவுன்ட்டர் ஊழியர் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 5 மணி அளவில் டிக்கெட் எடுக்க கவுன்ட்டருக்குப் பயணிகள் வந்தபோது டிக்கெட் கவுன்ட்டர் நீண்டநேரமாகத் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த பொதுமக்கள் ஜன்னல்வழியாக உள்ளே எட்டிப் பார்த்தபோது, ஊழியர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு இருப்பதைக் கண்டு ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு உடனே விரைந்துவந்து, பூட்டை உடைத்து உள்ளே சென்று கட்டிப் போடப்பட்டிருந்த ஊழியர் டீகாராம் மீனா(28)வின் கட்டுகளை அவிழ்த்து மீட்டனர்.

இரவுப் பணியில் தனியாக இருந்தபோது, அதிகாலை சுமார் 4 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று டிக்கெட் கவுன்ட்டருக்குள் புகுந்து, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நாற்காலியில் உட்கார வைத்து, கை மற்றும் வாயைக் கட்டிப்போட்டுவிட்டு கவுன்ட்டரில் இருந்த 1.32 லட்ச ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றதாகத் தெரிவித்தார் டீகாராம்.

இதையடுத்து ரயில்வே எஸ்பி அதிவீர பாண்டியன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டதுடன், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரயில்வே போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

கொள்ளை நடந்ததாகக் கூறப்பட்ட அந்த அதிகாலையில் ரயில் நிலையத்துக்கு ஒரு பெண் வந்து சென்றது, அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதைவைத்து போலீஸார் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தின் அதிரடி திருப்பமாக அந்தப் பெண், ரயில்வே ஊழியர் டீகாராமின் மனைவிதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து மனைவியுடன் சேர்ந்து ரயில்வே ஊழியர் டீக்காராம் ரூ.1,32,500-ஐ கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வே போலீஸார் அவர்களைக் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

x