இரு கார்கள் மோதியதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு: ஓட்டி பழகியபோது விபரீதம் @ நாமக்கல்


நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சுதர்சனம் (14). பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான ராமசாமி மகன் லோகேஷ் (17) என்பவருடன் சுதர்சனம் கார் ஓட்டிப் பழகிஉள்ளார்,

பரமத்தி வேலூர் சாலையில் இருக்கூர் என்ற இடத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மற்றொரு கார் மீது, சுதர்சனம் ஓட்டிச் சென்ற கார் அதிவேகமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சுதர்சனம், லோகேஷ் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், மற்றொரு காரில் வந்த இருக்கூர் விக்னேஷ் பலத்த காயமடைந்து, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் தந்தைகள் ரமேஷ், ராமசாமி ஆகியோர் மீது ஜேடர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

x