வீட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டு 25 பவுன் கொள்ளை


அரக்கோணத்தில், ஊருக்கு வெளியே வயல்வெளியில் வீடு கட்டி இருக்கும் குடும்பத்தை, நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சுட்டு கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

அரக்கோணம் அடுத்த செய்யூர் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா(52). மகன் புஷ்கரன்(24). இவர்கள் கிராமத்திற்கு வெளியே தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவே தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நேற்று இரவு புஷ்கரன் அவரது தாயார் சுதா, பெரியம்மா லதா(57), பாட்டி ரஞ்சிதம்மாள்(76) ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, யாரோ உறவினர் வந்திருப்பதாக நினைத்த புஷ்கரன் கதவைத் திறக்கச் சென்றார். இருந்தாலும் சந்தேகத்துடன் வெளியே எட்டிப் பார்த்தபோது வீட்டுக்கு வெளியே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கையில் துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சுதாரித்துக்கொண்டவர் உடனடியாக கதவை உட்புறமாக பூட்டுவதற்குள் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், புஷ்கரனையும் வீட்டிலிருந்த மற்ற 3 பெண்களையும் துப்பாக்கியால் சுட்டதில், அவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் புஷ்கரனை கத்தியால் வெட்டியதில் அவர் மயங்கினார்.

துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் புஷ்கரன் தாயார் உள்ளிட்ட பெண்கள் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம், 3 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவியவர்கள், ‘இதுகுறித்து போலீஸில் சொன்னால், நாங்கள் மீண்டும் இங்கு வருவோம். உங்கள் அனைவரையும் கொலை செய்வோம்’ என மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

புஷ்கரன் செல்போன் மட்டும் கொள்ளையர்கள் கண்ணில்படவில்லை. அந்த செல்போன் மூலம் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட 4 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சினிமா பாணியில் ஊருக்கு வெளியில் விவசாய நிலத்தில் தனியாக வீடு இருப்பதை நன்றாக நோட்டமிட்ட கும்பல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளது. கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேசியதால் இவர்கள் வட இந்திய கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x