ஆணவக் கொலை செய்த அண்ணனுக்குத் தூக்கு; கடலூர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சாதி ஆணவக் கொலை செய்தவர்களில் ஒருவருக்கு தூக்கு மற்றவர்களுக்கு ஆயுள் என அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறார் நீதிபதி உத்தமராசா.

இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கிய நீதிபதி உத்தமராசா, “நம் தமிழக வரலாற்றில் கண்ணகி மதுரையை எரித்ததாகவே இருக்கட்டும்" என்று ஆவேசமாகத் தனது கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

விருத்தாசலம் அருகே கடந்த 2003-ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி தம்பதி, கண்ணகியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கண்ணகியின் அண்ணனுக்குத் தூக்கு தண்டனையும், இவ்வழக்கில் தொடர்புடைய பலருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது கடலூர் நீதிமன்றம்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25). பட்டியலினச் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ படித்துவந்தார். அருகிலுள்ள புதுக்கூரைப்பேட்டையில் வசித்த, மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரும் அந்த நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஒரே பேருந்தில், விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் சென்று வந்த இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. வெவ்வேறு சமூகம் என்பதால், எதிர்ப்பு கிளம்பும் என்று யோசித்த இருவரும் பெற்றோர்களுக்குத் தெரியாமலேயே கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். எனினும், திருமணம் செய்துகொண்டதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவரவர் வீட்டிலேயே வசித்துவந்தனர்.

எவ்வளவு நாள்தான் பிரிந்து வாழ்வது என்று சிந்தித்த இருவரும் ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டுக் கிளம்பினர். தன்னை நாடிவந்த மனைவி கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் ஒருவரது வீட்டில் தங்கவைத்தார் முருகேசன். ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிக்காட்டிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று முருகேசன் தங்கியிருந்தார்.

கண்ணகியைக் காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்தது. இதையடுத்து, முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி என்பவர் மூலமாக இருவர் மீதும் கோபம் எதுவும் இல்லை; அதனால் அவர்களை ஊருக்கு வரச் சொல்லுங்கள் என்று முருகேசனுக்குத் தகவல் அனுப்பினார்கள். 2003 ஜூலை 8-ம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர். பின்னர் இருவரையும் மிரட்டி அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தைச் செலுத்தி அவர்களைக் கொலை செய்தனர். அதன்பிறகு, இருவரின் சடலங்களையும் பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கிவிட்டு வீடு திரும்பினர்.

சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள், விருத்தாசலம் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டனராம். சில நாட்களுக்குப் பின்னர், இந்தச் சம்பவம் குறித்து மெல்ல வெளி உலகுக்குத் தகவல் பரவ ஆரம்பித்தது. ஊடகங்களில் செய்தியும் வெளியானது. அதன்பின்னர்தான், விருத்தாசலம் காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனாலும் முருகேசனின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அழுத்தம் காரணமாக, இந்த வழக்கு 2004-ல் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில், கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து, இன்று (செப்.24) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், முருகேசன்- கண்ணகி ஆகியோரை ஆணவக் கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை, அண்ணன் உட்பட 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்குத் தூக்குத் தண்டனை விதித்த நீதிமன்றம், கண்ணகியின் தந்தை துரைசாமி உள்ளிட்ட மற்ற 12 பேருக்கு 3 ஆயுள் தண்டனைகளை வழங்கியது. சம்பவம் நடந்தபோது, விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த செல்லமுத்து மற்றும் உதவி ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் ஆகியோர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யாமலும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு போட்டதற்காகவும் இருவருக்கும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மற்றும் குணசேகரன் ஆகிய இருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கிய நீதிபதி உத்தமராசா, “நம் தமிழக வரலாற்றில் கண்ணகி மதுரையை எரித்ததாகவே இருக்கட்டும்" என்று ஆவேசமாகத் தனது கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

x