குடும்பச் சண்டையை விசாரித்த காவலர் மீது தாக்குதல்


சென்னை, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார். இவர், செப்.12-ம் தேதி, கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அழுதுகொண்டே வந்த பெண் ஒருவர், தனது கணவர் குடித்துவிட்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

உடனே சதீஷ் குமார் நேரில் சென்று, கணவரிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடன் இருந்த 4 பேர் சேர்ந்து, காவலர் சதீஷ்குமாரை தாக்கி சட்டையைக் கிழித்து அவதூறாகப் பேசி அனுப்பினர்.

பின்னர், காவலர் சதீஷ்குமார் இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், குடிபோதையில் காவலரைத் தாக்கிய பெயின்டர் பிரேம்குமார்(30), அவரது நண்பர் பிரபாகரன்(27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

x