ஆவடியில் கடையிலிருந்த ரூ. 4 லட்சம் திருட்டு!


சித்தரிக்கப்பட்ட படம்

சென்னை, திருநின்றவூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார்(52). இவர், ஆவடி கரிமேடு பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகின்றார்.

நேற்று மாலை, குமார் கடையில் உள்ள கல்லா பெட்டியில் ரூ.4 லட்சத்தை வைத்துவிட்டு, கடை எதிரே உள்ள கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கடையில் புகுந்து, கல்லா பெட்டியில் இருந்த ரூ.4 லட்சத்தைத் திருடிச் சென்றனர். சிறுநீர் கழித்துவிட்டு கடைக்கு வந்த குமார், கல்லா பெட்டியில் வைத்திருந்த 4 லட்ச ரூபாய் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இருவர் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில், முத்தாப்புதுப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து பணத்தைத் திருடிச்சென்ற மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

x