தமிழக அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.65 லட்சம் மோசடி செய்த வடமாநில நிறுவனம்


தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரசு ஒப்பந்ததாரரை நூதன முறையில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த, வடமாநில நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் பொருட்களுடன் 13 வகையான உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் 13 உணவுப் பொருட்களுக்கான டெண்டரை, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டது. இதில் ரவை, சர்க்கரையை அரசுக்கு விநியோகிப்பதற்காக மூகாம்பிகை என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது.

அதனடிப்படையில் மூகாம்பிகை என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வம்சி ரெட்டி, தனது நண்பர் மூலம் அறிமுகமான கான்பூர் நிறுவனத்திடம் இருந்து ரவை மற்றும் சர்க்கரை கொள்முதல் செய்வதற்காகத் தொடர்பு கொண்டார். கான்பூரில் உள்ள கங்கா ஜமுனா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் உதவி மேலாளர் ஜான்சன் டேவிட் என்பவர் தொடர்புகொண்டு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5 லட்சம் ஒரு கிலோ ரவை பாக்கெட்டுகள் மற்றும் 3 லட்சம் அரை கிலோ சர்க்கரை பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார். முன்னதாக, கங்கா ஜமுனா பிரைவேட் லிமிடெட் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலமாகவே நிறுவனம் தொடர்பான ஆவணங்களை உதவி மேலாளர் ஜான்சன் டேவிட் மூலம் பெற்று வம்சி ரெட்டி சோதனை செய்துள்ளார்.

அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால், முதற்கட்டமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் கங்கா ஜமுனா நிறுவனம் ரூ.65 லட்சம் முன்தொகையாக செலுத்துமாறு வம்சி ரெட்டியிடம் கூறியது.

அதன் அடிப்படையில், கங்கா ஜமுனா நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் ரூ.35 லட்சத்தை முன்தொகையாக ரெட்டி செலுத்தியுள்ளார். மீதி ரூ.30 லட்சத்தைச் செலுத்தும் போது கங்கா ஜமுனா நிறுவன வங்கி கணக்கு செயல்படாததால், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் என்பவரது வங்கிக் கணக்குக்கு அனுப்புமாறு நிறுவனத்தின் உதவி மேலாளர் ஜான்சன் டேவிட் தெரிவித்துள்ளார். அதன் பேரில் வம்சி ரெட்டி ரூ.30 லட்சத்தை அனுப்பினார்.

இதை அடுத்து அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் ஆர்டர் செய்த ரவை, சர்க்கரை ஆகிய 25 டன் உணவுப் பொருட்கள் 3 வாகனங்களில் நாக்பூரிலிருந்து சென்னை வருவதாகத் தெரிவித்தார். ஆனால், சரக்கு வாகன ஆவணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவருவது தொடர்பான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை. வாகன ஓட்டுநர் சஞ்சய் என்பவரின் தொடர்பு எண்ணை மட்டும் ஜான்சன் டேவிட் கொடுத்துள்ளார்.

உடனே வம்சி ரெட்டி சரக்கு வாகன ஓட்டுநர் சஞ்சயை தொடர்பு கொண்டபோது, ஆந்திராவில் சரக்கு வாகனங்கள் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், திருட்டு விவகாரம் தொடர்பாகச் சரக்கு வாகனத்தை மீண்டும் கம்பெனிக்கு கொண்டுசெல்ல உள்ளதாக வம்சி ரெட்டியிடம் ஓட்டுநர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த வம்சி ரெட்டி ஒப்பந்தத்தை ரத்துசெய்து முன் தொகையைத் திருப்பி செலுத்துமாறு, கங்கா ஜமுனா நிறுவன உதவி மேலாளர் ஜான்சன் டேவிட்டிடம் கூறினார். அதன் அடிப்படையில் அந்நிறுவனம் 10 மற்றும் 9 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை அனுப்பியது. ஆனால், வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகள் திரும்பி வந்ததையடுத்து, கங்கா ஜமுனா நிறுவனத்திடம் வம்சி ரெட்டி தொடர்பு கொள்ள முயன்ற போது, அந்த நிறுவனம் வம்சி ரெட்டியின் அழைப்புகள் அனைத்தையும் ப்ளாக் செய்தது.

இந்நிலையில், வம்சி ரெட்டியின் மூகாம்பிகை என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கை கான்பூர் போலீஸார் முடக்கினர். வம்சி ரெட்டி தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

திடீரென வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட விவகாரம் குறித்து, வம்சி ரெட்டி கான்பூர் போலீஸாரிடம் நேரடியாகச் சென்று விளக்கம் கேட்டுள்ளார். அப்போது கான்பூரில் வழக்கு ஒன்றில் தொடர்புடைய குற்றவாளியின் வங்கி கணக்குக்கு வம்சி ரெட்டி லட்சக்கணக்கில் பணம் அனுப்பினார் என்றனர். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக கான்பூர் போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், சென்னை காவல் துறையில் வம்சி ரெட்டி, தான் மோசடி செய்யப்பட்டதை புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யுமாறு கான்பூர் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். அந்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து வங்கிக் கணக்குகளை விடுவிப்பதாக கான்பூர் போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வம்சி ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், கான்பூர் நிறுவனமான கங்கா ஜமுனா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் மற்றும் உதவி மேலாளர் ஜான்சன் டேவிட், ஓட்டுநர் சஞ்சய் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

திட்டமிட்டு நூதன முறையில் பொருட்களை விநியோகம் செய்வதாகக் கூறி, மோசடி செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பலின் நிறுவனம் போலியா என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.

x