கொரட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


கொரட்டூரில் ஓய்வுபெற்ற குடிநீர் வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

சென்னை, கொரட்டூர் வெங்கட்ராமன் நகரைச் சேர்ந்தவர் ரகுநாதன் (65). இவர் சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று முன்தினம் ரகுநாதன், தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்குச் சென்றார். இந்நிலையில், நேற்று இரவு ரகுநாதனின் அண்ணன் சந்திரசேகர், தம்பி ரகுநாதனின் வீட்டைப் பார்க்கச் சென்றபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.35 ஆயிரம் பணம் கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், கொரட்டூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சென்னை புரசைவாக்கம் அழகப்பா தெருவில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான வெற்றிலை பாக்கு கடையின் பூட்டை உடைத்து ரூ.9 ஆயிரம் பணம், 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சுரேஷ் அளித்த புகாரின் பேரில், வேப்பேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x