எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருச்சி இளைஞர் கைது


கைதான நபர்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருச்சி இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகர் திருவள்ளுவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வினோத் கண்ணா (45). இவர் சொந்த வேலை காரணமாக திருவாரூருக்கு சென்றுவிட்டு அங்கிருந்து சென்னை எழும்பூருக்கு விரைவு ரயிலில் கடந்த 28-ம் தேதி இரவு புறப்பட்டார். ரயிலில் முதல்வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்தார். ரயில் புறப்பட்ட சில மணி நேரத்தில் தனது பெர்த்தில் படுத்து உறங்கிவிட்டார்.

மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை விரைவு ரயில் வந்தடைந்தபோது, அவர் எழுந்து தனது பையை தேடியபோது அது மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த வினோத் கண்ணா எழும்பூர் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், ரயில்வே காவல் ஆய்வாளர் மீனாட்சி வழக்குப்பதிந்தார். இதைப்போல 2 புகார்கள் எழும்பூர் ரயில்வே போலீஸில் ஏற்கெனவே பதிவாகி இருந்தது. இதையடுத்து, குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் முதலில் ஒவ்வொரு ரயில்நிலையத்திலும் சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒருநபர் பையை எடுத்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது அங்க அடையாளங்களை வைத்து விசாரித்தபோது, பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் அவர்தான் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த நபரை தீவிரமாக தேடிவந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகளிடம் திருட்டியில் ஈடுபடவந்த அந்த நபரை ரயில்வே போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரை எழும்பூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அந்நபர் திருச்சி மாவட்டம் தயானூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (28) என்பதும், ரயில் பயணிகளிடம் பைகளை திருடி வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து இதுவரைில் 5 பயணிகளிடமிருந்து திருடப்பட்ட ரூ.3 லட்சம் ரொக்கம், 5.5 சவரனுள்ள 2 தங்க நகைகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.