போலீஸார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பெண் குண்டர் சட்டத்தில் கைது @ கோவை


கோவை: சமூக வலைதளத்தில் பொதுமக்கள், போலீஸார் குறித்து அவதூறு பரப்பி வந்த பெண், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் விஷ்வதர்சினி (44). இவர் சேரன் மாநகரை சேர்ந்த செலினா என்பவருடன் சமூக வலைதளத்தில் அறிமுகமானார். பின்னர் விஷ்வதர்சினி, தான் டிரஸ்ட் நடத்தி வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் வாங்கினார். ஆனால், பணத்தை திருப்பி தரவில்லை. இதனிடையே பணத்தை திருப்பி கேட்ட செலினாவை, சமூக வலைதளத்தில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக செலினா, செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கடந்த மே 8-ம் தேதி விஷ்வதர்சினியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், காவல்துறைக்கு எதிராக பொது மக்களை தூண்டும் விதமாகவும், மிரட்டுவதாகவும், விஷ்வதர்சினி பேசிய ஒரு வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக செல்வபுரம் உதவி ஆய்வாளர் ராஜா அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விஷ்வதர்சினி கைது செய்யப்பட்டார்.

மேலும் கடந்த ஜனவரி 24-ம் தேதி துடியலூர் காவல் நிலையத்தில், காவலர்களுடன் ஆபாசமாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு உள்ளது. மேலும் கடந்த 2020-ல் பத்திரிகையாளர் ஒருவருடன் பழகி முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இவர் 2018-ல் சிறுமி பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி, பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையில் வழக்குப்பதிவு செய்து, போக்சோ நீதிமன்றத்தில் மூன்று ஆண்டு சிறை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விஷ்வதர்சினி தொடர்ந்து பொது மக்களையும், காவல்துறையினரையும் முகநூல் பக்கத்தில் ஏமாற்றுவதையும், மிரட்டுவதையும், அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

எனவே கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி விஷ்வதர்சினி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.