தமிழகத்தை மிரட்டும் சைல்டு செக்ஸ் டூரிஸம்!- நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?


மற்றுமொரு ‘நிர்பயா’ போன்ற சம்பவத்தால் கொந்தளிக்கிறது தமிழகம். இந்த முறை சென்னை அயனாவரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது பதின்மத்தைக்கூட தொடாத சின்னஞ்சிறு பெண் குழந்தை. அதிலும், கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிக் குழந்தை. எதிர்படுவோரை எல்லாம் தாத்தா, மாமா, அண்ணா என்றழைத்த வெகுளிக் குழந்தை. அந்தத் தாத்தாக்களும் மாமாக்களும் அண்ணன்களும்தான் அவளைக் குதறிப்போட்டுள்ளார்கள். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டவர்களின் படங்களைப் பார்க்கையில், அவர்கள் யாரும் சினிமாக்களில் காட்டப்படும் கொடூர சைக்கோ வில்லன்களைப் போல் தோன்றவில்லை. கற்பனைக் கதைகளில் வரும் குழந்தைகளை உண்ணும் பூதங்களைப் போலும் இல்லை. அனைவருமே அக்கம்பக்கத்தில், அலுவலகத்தில், வழிப்பயணங்களில் நாம் புன்னகையுடன் எதிர்கொள்ளும் சக மனிதர்களைப் போலத்தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எங்கிருந்து வந்தது இத்தனை வக்கிரம்?

மனித மனம் விசித்திரமானது மட்டுமல்ல. அது வக்கிரமானதும்கூட. காதல், பாசம், கருணை, கோபம், பரிதாபம், விருப்பு, வெறுப்பு என எல்லா உணர்வுகளையும்போல அது வக்கிரங்களையும் சுமந்தே அலைகிறது. இது அத்தனை பேரிடமும் உண்டு. ஆனால், அதன் அளவீடு எவ்வளவு, அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதிலிருந்தே ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள். அதிலும் பாலுணர்வின் வக்கிரம் வரைமுறைகளற்றது. எளிதில் நிறைவடையாதது. ரத்த உறவுகளையே கூறுபோடும் அது. பாலினம் பார்க்காது, வயது தெரியாது. குழந்தைகள், முதியவர்கள் தொடங்கி ஆடு, மாடு, குதிரை வரை அடுத்தடுத்து இரை தேடுவது அது. அயனாவரம் சம்பவத்தைத் தொடர்ந்து சாமானியர்கள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள் வரை பொங்குகிறார்கள். கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் சமூக ஊடகங்களில் வெடித்துச் சிதறுகின்றன. ஆனால், இந்த ஆவேசமும் அற உணர்வுகளும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது என்பதில்தான் இருக்கிறது அடுத்த ‘நிர்பயா’வுக்கான ஆபத்து.

இங்கே நிர்பயாவும் ஹாசினியும் ஆசிஃபாவும் மட்டும் சிதைக்கப்படவில்லை. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் தகவலின்படி நம்மைச் சுற்றி எட்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் ரீதியாக சிதைக்கப்படுகிறது. அதற்கெல்லாம் என்ன தீர்வு வைத்திருக்கிறோம்? அடுத்தவர் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஆத்திரப்படும் நாம், நமது குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறோம். நம்மைச் சுற்றியும் நம் குழந்தைகளைச் சுற்றியும் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன என்பதற்கெல்லாம் விடை தேட முயல்வோம், வாருங்கள்.

‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’ தெரியுமா?

x