பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி காலமானார் - ‘ஏப்ரல் மாதத்தில்’ படம் மூலம் அறிமுகமானவர்!


சென்னை: தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநரும், உறுதுணை நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டேன்லி காலமானார். அவருக்கு வயது 58.

கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். அவரது உடல் இன்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி. அதன்பின் தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்தின் ‘மெர்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனத்துக்குரிய இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி.

அதன்பின், உறுதுணை நடிப்பில் கவனம் செலுத்திய அவர், 2007-ம் ஆண்டு ஞான.ராஜசேகரன் இயக்கிய ‘பெரியார்’ படத்தில் அறிஞர் அண்ணாவாக நடித்து கவனம் ஈர்த்தார். அதன்பின் ‘ராவணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சர்கார்’, ‘பொம்மை நாயகி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பவராக அவர் நடித்தது வெகுவாக பேசப்பட்டது. கடைசியாக விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x