இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்க துறை உத்தரவுக்கு இடைக்கால தடை


எந்திரன் திரைப்படத்தின் கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகர் ரஜினி, நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் காப்புரிமையை மீறி செயல்பட்டுள்ளதாகக்கூறி, அவருடைய அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

அமலாக்கத்துறையின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை ஒருபோதும் மீறவில்லை. அந்தக் கதைக்கு சொந்தம் கொண்டாடி ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை ஷங்கரின் சொத்துகளை முடக்கியுள்ளது. எந்திரன் திரைப்படத்தின் கதைக்காக மட்டுமே அவர் ரூ. 11.5 கோடி ஊதியம் பெறவில்லை. அந்த படத்தின் மற்ற பணிகளுக்காகவும் அவர் அந்த சம்பளத்தைப் பெற்றுள்ள நிலையில், அவருடைய சொத்துகளை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிபதிகள், தனிநபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாகக்கூறி அமலாக்கத்துறை ஷங்கருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய முடியுமா என்றும், அமலாக்கத்துறை அவசர கதியில் நடவடிக்கை எடுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.சிபி விஷ்ணு, இதுதொடர்பாக தனிநபரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். மேலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ளலாம் என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். பின்னர் இதுதொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.21-க்கு தள்ளி வைத்துள்ளனர்

x