சாச்சனாவைத் தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேறப் போவது இவரா?


பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் முதல் போட்டியாளராக சாச்சனா வெளியேறி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து எந்தப் போட்டியாளர் வெளியேற வாய்ப்புகள் இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இந்த வாரம் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக நடிகர் விஜய்சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனின் அதிரடியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திலேயே எவிக்‌ஷன் என்ற அறிவிப்பை விஜய்சேதுபதி கொடுத்தார்.

இதில் சாச்சனா முதல் போட்டியாளராக வெளியேறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து மீதம் இருக்கும் 17 போட்டியாளர்களில் நாமினேஷன் பட்டியலில் முத்துக்குமரன், ஜாக்குலின், ரவீந்தர், ரஞ்சித், அருண்பிரசாத், செளந்தர்யா ஆகியோர் வந்துள்ளனர். இதில் பார்வையாளர்கள் யாருக்கு குறைவான வாக்குகள் கொடுக்கிறார்களோ அவர்கள் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்கள்.

இதுமட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளாக நேற்று வீட்டின் கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க்கும் நடந்தது. இதில் ஆண்கள் vs பெண்கள் சேரில் அமரவைக்கப்பட்டு கேப்டன் சேரை பிடிப்பதற்கான டாஸ்க் நடந்தது. இதில் முதல் ரவுண்டில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். ரவீந்தரின் அதீத உடல் எடை காரணமாக அவர் சேரைப் பிடிக்க ஓடியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டாலும் இந்த வாரம் இதைக் காரணமாகக் கொண்டு அவர் வெளியேறுவாரா என பார்வையாளர்கள் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

x