கமல் VS விஜய்சேதுபதி: பிக்பாஸ் 8 முதல் பாலில் சிக்ஸர் அடித்தாரா விஜய்சேதுபதி!?


பிக்பாஸ் தமிழின் எட்டாவது சீசனில் விஜய்சேதுபதி நேற்று தொகுத்து வழங்கிய நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதையும், விஜய்சேதுபதி தொகுத்து வழங்கியதையும் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார். முன்பு ஒளிபரப்பான ஏழு சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பதால் அவரது இடத்தை விஜய்சேதுபதி எப்படி நிரப்பப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

கமல்ஹாசனின் அனுபவ அறிவு, மேடைப்பேச்சு, சூழ்நிலைக்கு ஏற்றபடி பகிரும் சுவாரஸ்ய சம்பவங்கள், போட்டியாளர்களிடம் காட்டும் கண்டிப்பு, வாரந்தோறும் புத்தக பரிந்துரை என நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கினார். இதுபோலவே நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூட்டுவாரா விஜய்சேதுபதி என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது விஜய்சேதுபதியிடம் சிறு பதற்றமும் தடுமாற்றமும் இருந்தாலும் பிக்பாஸில் கமலின் ஸ்டைலைக் காப்பியடிக்காமல் தனக்கே உரிய இயல்பான, கலகலப்பான, அக்கறையான பேச்சால் முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் விஜய்சேதுபதி.

குறிப்பாக, சாச்சனாவை அறிமுகப்படுத்திய போது காட்டிய பாசம், ‘கவுண்டாம்பாளையம்’ படத்திற்காக ரஞ்சித்திடம் காட்டிய அன்பு கலந்த கண்டிப்பு, போட்டியாளர்கள் ஒவ்வொருவரது பேச்சையும் கவனித்து அவர்களுக்குக் கொடுத்த குட்டி அட்வைஸ், புகழ்ச்சியில் மயங்காதது என பக்குவமாகக் கையாண்டு முதல் பாலியே சிக்ஸர் அடித்தார். நிகழ்ச்சி முடியும்போது பார்வையாளர்களிடம் இருந்து, தான் தொகுத்து வழங்குவதற்கான ஃபீட்பேக்கும் வாங்கிக் கொண்டார். நிகழ்ச்சி முழுவதையும் இதே பக்குவத்தோடு விஜய்சேதுபதி கையாள்வாரா அல்லது கண்டிப்பு காட்டுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x