நடிகர் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!


நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் இந்த மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரெய்லரில் ’என்கவுண்டர் பண்ண ஒரு வாரம் தேவையில்லை; மூனு நாள் போதும்’, ‘அநீதி நடக்கும் போது போலீஸ் அதிகாரத்தை கையில் எடுக்கணும்’ என்பது போன்ற என்கவுண்டர் தொடர்பாக ரஜினி பேசும் வசனங்களும் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றிருக்கு என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் அல்லது படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த மனு அவசர வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை ‘வேட்டையன்’ படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

x