ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும்: விஜய் விருப்பம்


சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் செய்தியில், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்,ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து சற்று முன்பு அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், ‘சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில்(ஆர்டா) ரத்தக் கசிவு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாமல் எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி, ரஜினிகாந்த்துக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நல்ல முறையில் முடிக்கப்பட்டதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாள்களில் வீடு திரும்புவார்' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x