தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? - ஜி.வி.பிரகாஷ் கேள்வி


சென்னை: இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார். இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில், “அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூகஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது ‘யாரோ ஒரு தனிநபரின்’ வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர்மாண்பு குறைந்து விட்டதா? எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீதுதங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ, தங்களின்ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்” என தெரிவித்துள்ளார்.