”நடிகை அலியாபட் போலவே என்னுடைய குழந்தைக்கும் நிறைய அழகான மெமரீஸ் கொடுக்க வேண்டும்” என நடிகை அங்கிதா லோகண்டே கூறியிருக்கிறார்.
பாலிவுட் நடிகர்கள் அங்கிதா லோகண்டே மற்றும் விக்கி ஜெயின் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஏப்ரல், 2021ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் குழந்தை பேறு பற்றி இந்த ஜோடி ஊடகங்களிடம் உற்சாகமாக பேசியுள்ளது.
குறிப்பாக அங்கிதா பேசும்போது, “குழந்தைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். குழந்தைகளுக்கான பெயர்களைக் கூட நாங்கள் யோசித்து வைத்துவிட்டோம். எங்களுடைய உறவின் எதிர்காலம் குழந்தைகள் தான். குழந்தைகளைப் பற்றி பேசுவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம்தான்” என்று சொன்னார்.
மேலும் அவர் பேசும்போது, “குழந்தைகளுக்கு எங்களைப் பற்றிய நிறைய அழகான நினைவுகளை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு பண்டிகை மற்றும் குடும்பத்துடன் கொண்டாடும் விழாக்களை 20 வருடங்கள் கழித்து நாம் பார்க்கும் போதும் அது நமக்கு மகிழ்ச்சி தானே?!
அந்த நினைவுகளை என் குழந்தைகளும் பார்த்துக் கொண்டாட வேண்டும் என்று நினைத்துள்ளேன். அதை நிச்சயம் செய்வேன். ஈமெயிலில் இதையெல்லாம் சேகரித்து வைத்து குழந்தைக்கு 18 வயதாகும்போது அதன் பாஸ்வேர்ட் கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் அலியா பட்- ரன்பீர் கபூரும் தங்கள் மகள் ராஹா பிறப்பதற்கு முன்பே இதேபோல கூறினர். அதாவது, தங்கள் குழந்தைக்கும் இதேபோல ஈமெயில் அனுப்பி அதைப் பரிசாகக் கொடுப்போம் என்று கூறினர்.