இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... ஜேம்ஸ் வசந்தன் அதிரடி!


ஜேம்ஸ் வசந்தன்

தார்மீகப்படி, இளையராஜாவின் இசை தயாரிப்பாளர் களுக்குத்தான் சொந்தம் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காமதேனு டிஜிட்டல் நேர்காணலில் பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இளையராஜாவின் காப்புரிமை தொடர்பான விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக, ரஜினிகாந்தின் ‘கூலி’ பட டைட்டிலில் அனுமதி இல்லாமல் தனது இசையைப் பயன்படுத்தியதற்காக இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது, வைரமுத்து -கங்கை அமரன் பேச்சு என இந்த விஷயம் நீண்டு கொண்டே போகிறது.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் ‘காமதேனு’ டிஜிட்டலுக்காகப் பேசினோம். ”வெளிநாடுகளில் பாடலை எழுதி, பாடி, இசையமைக்கும் சுயாதீன இசைக்கலைஞர்கள்தான் அதிகம். அதனால், அந்தப் பாடல் உரிமை அவர்களுக்குத்தான் சொந்தம் என்ற சட்டம் அங்கு இருக்கிறது. அதே சட்டம்தான் நம் நாட்டிலும் இருக்கிறது. இதை வைத்துத்தான் இளையராஜா திரைப்படங்களில், தான் இசையமைத்த பாடல் இசை தனக்கே சொந்தம் எனக் கூறி வருகிறார்.

சட்டப்படி அவர் கேட்பது சரிதான். ஆனால், தார்மீக உரிமைப்படி தவறு. ஏனெனில், ஒரு படம் உருவாக தயாரிப்பாளர்தான் முதல் காரணம். அவர்தான் இயக்குநரை நியமித்து, இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அனைவருக்கும் சம்பளம் கொடுக்கிறார்.

அதில் எதாவது பிரச்சினை வரும்போதும் அவர்தான் அதை எதிர்கொள்கிறார். இயக்குநரின் கதைக்கும் அவர் சொல்லும் சூழலுக்கும்தான் இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.

இளையராஜா

இதுவே நீங்கள் தனிப்பட்ட முறையில் இசையமைத்து வைத்திருக்கும் பாடல் ஒன்றை திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள் என்றால் உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், இயக்குநர் சொல்லும் சூழலுக்கும் தயாரிப்பாளர் கொடுத்த பணத்திற்கும் இசையமைக்கும் உங்களுக்கு அந்த இசையின் மீது எந்தவிதமான உரிமையும் இல்லை என்பதுதான் என் வாதம்.

இதனைப் புரிந்து கொண்டு மனது மாறி, தார்மீகப்படி இளையராஜாவே விட்டுக்கொடுக்க வேண்டும்! மற்றபடி, இந்த விவகாரத்தில் வைரமுத்து- கங்கை அமரன் பேச்சு இருவருக் குள்ளும் இருக்கும் ஈகோ பிரச்சினை” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

x